முரளி - சர்ச்சைகளின் நாயகன்
மு.கு.
அறியாத வயதில் நான் முழுதாக பார்த்த முதல் டெஸ்ட் போட்டி. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இலங்கை அவுஸ்திரேலிய முதலாம் டெஸ்ட் போட்டி ஆகும். அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 256 ஓட்டங்களை பெற்றது, இலங்கை துடுப்பெடுத்தாடுகையில் முதல் முறையாக இலங்கைக்காக விளையாடிய ரொமேஷ் களுவித்தாரன 26 பவுண்ரிகளுடன் 132 ஓட்டங்களை பெற்று அக்காலத்தில் இமாலய ஓட்டமாக கருதப்பட்ட 547 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரளவுக்கு சுதாகரித்து ஆடி இலங்கைக்கு வெற்றி பெற இலக்காக 180ஆக வைத்தது. கடைசி நாள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதையறியாத நான் இலங்கை இலகுவாக போட்டியில் வெல்லும் என நினைத்திருந்தேன், ஆனால் இலங்கைக்கு பெற முடிந்ததோ 164 ஓட்டங்களை தான், அப்போட்டி தோல்வியின் பின் அன்று முழு நாளும் அழுதேன். அப்போட்டியில் கடைசியாக ஆட்டமிழந்த ரஞ்சித் மதுருசிங்க என்னும் சுழல் பந்து வீச்சாளர் மீது எனக்கும் இன்னும் ஒரு கோவமிருக்கிறது.
இரண்டாவது போட்டியில் மதுருசிங்கவை நீக்கி இலங்கை தேர்வு குழுவினர் முரளிதரனுக்கு இடமளித்தது தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. அன்று முதல் இன்றுவரை அந்த முரளி என்னும் மாயக்காரனை நான் ரசித்து வந்திருக்கிறேன்.
முரளி பற்றி ஏராளமான சர்ச்சைகள் வந்திருக்கின்றன, அவற்றில் அநேகமானவை முரளி பற்றிய பொறாமையினால் வந்தவையே, அவற்றில் சிலவும் அதன் பற்றிய எனது கருத்துக்களும்
சர்ச்சை 1.
முரளி பங்களாதேஷ், சிம்பாபே போன்ற பலம் குன்றிய அணிகளுடனே அதிகம் விக்கட்டுகள் சரித்திருக்கிறார்.
இலங்கை அதிகம் டெஸ்ட் விளையாடும் அணிகளுடன் தான் அதிகம் விக்கட்டுகள் விக்கட்டுகளை பெறலாம், முரளி பற்றிய பயத்தினாலோ அல்லது இலங்கை பற்றிய பயத்தினாலோ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா இலங்கைக்கு அதிக போட்டிகளை வழங்குவதில்லை. அப்படியிருக்கும் போது அதிகம் விளையாடாத நாடுகளுடன் முரளி எப்படி அதிகம் விக்கட்டுகளை சாய்ப்பார்?
சிம்பாவே, பங்களாதேஷ் அணிகளை போலவே இங்கிலாந்து அணியும் சுழல் பந்து வீச்சாளர்களை சந்திப்பதில் பயப்படும் அணியே. அது முரளி இங்கிலாந்துக்கு எதிராக செய்த சாதனைகளிலிருந்து தெரிந்திருக்கும். அப்படியாயின் ஷேன் வோர்ன் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற விக்கட்டுகள் எல்லாம் சாதாரணமானதா? (வோர்ன் என்னும் அற்புத பந்து வீச்சாளரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நான் பார்த்து வியந்த பந்துவீச்சாளர்களில் வோர்னும் ஒருவர்).
இன்னொரு முக்கிய விடயம் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் 50 விக்கட்டுகளை பெற்ற ஒரே வீரர் முரளியாகும். இப்படியிருக்கும் போது முரளியின் சாதனை பங்களாதேஷ், சிம்பாபே அணிகளுக்கு எதிராக மட்டுமே என எப்படி கூறலாம்.
சர்ச்சை 2
முரளி பந்தை எறிகிறார்.
முரளி என்னும் பந்து வீச்சாளரை கண்டு பொறாமைப்பட்ட வெள்ளையர்கள் அவரை கட்டுபடுத்த செய்த சதியே அவரை எறி பந்து வீச்சாளர் கூறியது, முரளியை அவுஸ்திரேலியர்கள் பந்தை எறிபவர் என கூறியது ஒரு திட்டமிட்ட சதியேயாகும். அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளுக்கும் எறிவதாக நோபோல் வழங்கப்பட்டதே அதற்கு சான்றாகும். லெக்ஸ்பின் பந்துகளை எறியவியலாது என்பது கிரிக்கட் பற்றி அறிந்த கற்றுக்குட்டிகளுக்கும் தெரியும். முரளிதரனின் பந்துவீச்சை குறை கூறும் அவசரத்தில் நடுவர் ரோஸ் எமர்சன் அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளையும் எறிவதாக கூறியது நகைப்புக்குறிய விடயமாகும்.
எத்தனையோ பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்து தன்னை நிரூபித்துள்ள முரளியைவிட பிரெட்லீ அதிக கோணத்தில் (Angle) பந்தை வீசுவது அவுஸ்திரேலிய பரிசோதனை கூடங்களிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை 3
முரளி இலங்கையிலேயே அதிக விக்கட்டுகளை பெற்றிருக்கிறார்.
இலங்கைக்காக விளையாடும் பந்துவீச்சாளர் தான் அதிகம் விளையாடிய இலங்கை மைதானங்களில் விக்கட்டுகளை பெறாமல் சோமாலியாவுக்கு சென்றா விக்கட்டுகளை பெறுவது.
சர்ச்சை 4
முரளி தமிழில் பேசுவது இல்லை, சிங்களம் மட்டுமே பேசுகிறார். அவர் தமிழர்களை மதிப்பதில்லை.
முதலில் விளையாட்டு வீரர்களை வீரர்களாக மாத்திரம் பாருங்கள், இனம், மதம், சாதி கொண்டு பிரிக்காதீர்கள்.
முரளி தமிழில் பேசாமல் தமிழகத்தை சேர்ந்த தனது மனைவிடன் சிங்களத்திலா பேசியிருப்பார், இல்லை மதிமலர் சிங்களம் பயின்ற பின்னரே அவரை திருமணம் செய்தார். யாருடன் எம்மொழியில் தனது கருத்தை தெரிவிக்க முடியுமோ அவருடன் அம்மொழியில் கதைத்தால் போதும். அவரது தாய் வெற்றி வானொலியின் அவதாரத்தில் கூறியது போல் முரளியுடன் தமிழில் கதைத்தால் தமிழில் கதைப்பார், சிங்களத்தில் கதைத்தால் சிங்களத்தில் கதைப்பார், அல்லது தசாவதார இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கி சானின் முன்னிலையில் கருணாநிதி தமிழில் ஜாக்கியை வாழ்த்தியதை போல பேச வேண்டும் என்கிறீர்களா?
பி.கு. (அன்று கருணாநிதி பேசிய தமிழ் எங்களுக்கு விளங்க வில்லை, ஆனால் எல்லாம் விளங்கியயது போல் எப்படி ஜாக்கி சான் தலையசைத்து சிரித்தாரோ தெரியவில்லை)



















