நூடுல்ஸ் - 28-07-2010

நேற்று இயற்கையை காதல் கொள்ளும் விடயங்களை பற்றி விடியலில் பேசிய லோஷன், இன்று காலை விடியலில் குழந்தை பருவத்தில் யாராக வர விரும்பினீர்கள் நிகழ்ச்சி நடத்தினார். அதை பார்த்ததும் சிறிய வயதில் நான் கண்டவர்களிடமெல்லாம் “நான் டொக்டராக வருவேன்” என செல்லி திரிந்தது ஞாபகம் வந்தது. யாரோ என் மனதில் சிறிய வயதில் விளைத்தது தான் டொக்டர் ஆசை. அதே ஆசையில் எனது படிப்பை தொடர்ந்தேன். இரசாயனவியல் மற்றும் தாவரவியல் பரீட்சை தாள்கள் தயாரிக்கும் பேராசிரியர்களின் சதியினால் என்னால் டொக்டராக முடியவில்லை. (அப்புறம் நான் படித்த கேள்விகள் பரீட்சையில் வராதது யார் செய்த சதி?) நான் டொக்டராகாமல் விட்டது பல உயிர்களுக்கு இலாபம் என்பது வேறு விடயம்.

இம்மாதிரியான பல விடயங்களை தாங்கி வரும் விடியல் எங்களில் பலருக்கு நாளுக்கு நல்ல தொடக்கத்தை வழங்குகிறது, அதற்காக லோலஷனுக்கும் மற்றைய வெற்றி குழுவினர்களுக்கும் நன்றிகள். இப்போதெல்லாம் நான் கேட்கும் ஒரே வானொலி நிகழ்ச்சி விடியல் மட்டும்தான், காரணம் நேரமின்மை. எனது நண்பியொருத்தி வெற்றியில் “நண்பனிடம் கேளுங்கள்” நிகழ்ச்சி கேட்க சொன்னாள், நல்ல நிகழ்ச்சியாம். நேரமின்மையினால் கேட்க முடியவில்லை.
-------------------------------------------------------------

இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் பல புரட்சிகள் செய்த சூரிய வானொலி பிறந்த நாளை கடந்த வாரம் கொண்டாடியது. ஒரு காலத்தில் எனது நாளில் அநேகமான நேரத்தை சூரியனுடன் கழித்திருக்கிறேன். “மணி அடித்தி்ட இசை ஒலித்திடும் இசைத்திடும் இன்ப ராகங்கள்”, “சூரியராகங்கள்”, “மெய் மறப்போம் பொய் கறப்போம்” போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். 


சூரிய வானொலிக்கும் சூரிய குடும்பத்திற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து வானலையில் சூரியன் ஜொலிக்கட்டும்



-------------------------------------------------------------


பல சாதனைகளை படைத்து கடந்த வாரம் ஓய்வு பெற்ற முரளிதரன், பிஷன் சிங் பேடி அவரை பற்றி பல வருட காலமாக கூறி வந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கிறார். என்னை பொறுத்த வரையில் பிஷன் சிங் பேடி முரளியை விமர்சிப்பது பொறாமையினால் என்றே நினைக்கிறேன். முரளி எத்தனை சோதனைகளில் தன்னை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஏன்????



-------------------------------------------------------------


இப்போது முரளியை பலரும் தமிழர் பிரச்சினையை பேசவில்லை என கூறி தமிழின் எதிரியாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள், ரகுமான் ஒஸ்கார் மேடையில் இப்பிரச்சினையை பேசாமல் தமிழினத்திற்கே துரோகம் செய்து விட்டார் என ராதாரவி தொடங்கிய பிரச்சினையின் வேறு வடிவம்தான் இது. இலங்கை தமிழரை வைத்து இன்னும் எப்படியெல்லாம் இலாபம் சம்பாதிக்க போகிறார்களோ தெரியாது. 

சீமானுக்கு அவரது படபிடிப்பை இலங்கையில் நடத்துகையில் இலங்கை நல்ல நாடாக தெரிந்தது. சகோர மொழி பேசும் நாயகியை தனது படத்தில் நடிக்க வைக்கலாம், ஆனால் இப்போது விவேக் ஓப்ராயோ அல்லது அசினோ இங்கு வந்தால் .................................................................. (வார்த்தை அசிங்கமாக வருகிறது, வேண்டாம்)



-------------------------------------------------------------


இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் மூக்கை நான் நுளைக்காமலிருப்பதற்கு முக்கிய காரணம், நான் பதிவெழுத தொடங்க முன்னைய காலத்தில் தெரிந்த யுனிகோட் தமிழில் தட்டு தடுமாறி இலங்கை தமிழர் பற்றிய யாரோ ஒருவர் எழுதிய பதிவில் பின்னூட்டி நல்லா வாங்கி கட்டினேன். அதுதான் நான் எழுதிய பின்னூட்டம், அந்நேரம் எனக்கு பதிவுகள் பற்றிய பெரிய அறிவு கிடையாது. என்னை பலர் நீ மலையகத்தான் உனக்கு ஈழ தமிழரை பற்றி பேச உரிமையில்லை என கூறிவிட்டனர். உண்மையை கூறினால் என்னுள்ளே எள்ளளவும் பிரதேச வாதமில்லை, ஆனாலும் அன்று தொடக்கம் இன்று வரை நான் அரசியல் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய பதிவுகளில் அடக்கியே பின்னூட்டியிருக்கிறேன். 

ரொம்ப நாளாகவே சொல்ல விரும்பிய விடயம் இன்று சொல்லிவிட்டேன்.



-------------------------------------------------------------



இன்று செவாக் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார், சென்ற முறை இலங்கை வந்திருந்த போது 199 ஓட்டங்களிலென்று நினைக்கிறேன், முரளியின் பந்தில் ரிவர்ஸ் சுவீப் செய்து 4 ஓட்டங்களை பெற்று இரட்டை சதம் பெற்றார். அரவிந்த, சனத் ஆகியோரும் இவ்வாறே 6 அல்லது 4 ஓட்டங்களின் மூலமே சதத்தை பெறுவர். அந்த தன்னம்பிக்கை உள்ளதன் காரணமாக எனக்கு சேவாக்கை ரொம்ப பிடிக்கும். என்னை பொருத்த வரையில் இந்திய அணியில் தன்னம்பிக்கை அதிகம் உள்ள வீரராக நான் கருதுவது சேவாக்கைதான். விவியன் ரிச்சர்ட்சும் இப்படி தன்னம்பிக்கையோடு விளையாடியதாக கூறுவார்கள்.

-------------------------------------------------------------


கிரிக் இன்போ இணைய தளத்தில் நான் ரசித்த கார்டூன்

முரளி - சர்ச்சைகளின் நாயகன்

மு.கு.
அறியாத வயதில் நான் முழுதாக பார்த்த முதல் டெஸ்ட் போட்டி. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இலங்கை அவுஸ்திரேலிய முதலாம் டெஸ்ட் போட்டி ஆகும். அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 256 ஓட்டங்களை பெற்றது, இலங்கை துடுப்பெடுத்தாடுகையில் முதல் முறையாக இலங்கைக்காக விளையாடிய ரொமேஷ் களுவித்தாரன 26 பவுண்ரிகளுடன் 132 ஓட்டங்களை பெற்று அக்காலத்தில் இமாலய ஓட்டமாக கருதப்பட்ட 547 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரளவுக்கு சுதாகரித்து ஆடி இலங்கைக்கு வெற்றி பெற இலக்காக 180ஆக வைத்தது. கடைசி நாள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்பதையறியாத நான் இலங்கை இலகுவாக போட்டியில் வெல்லும் என நினைத்திருந்தேன், ஆனால் இலங்கைக்கு பெற முடிந்ததோ 164 ஓட்டங்களை தான், அப்போட்டி தோல்வியின் பின் அன்று முழு நாளும் அழுதேன். அப்போட்டியில் கடைசியாக ஆட்டமிழந்த ரஞ்சித் மதுருசிங்க என்னும் சுழல் பந்து வீச்சாளர் மீது எனக்கும் இன்னும் ஒரு கோவமிருக்கிறது. 

இரண்டாவது போட்டியில் மதுருசிங்கவை நீக்கி இலங்கை தேர்வு குழுவினர் முரளிதரனுக்கு இடமளித்தது தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. அன்று முதல் இன்றுவரை அந்த முரளி என்னும் மாயக்காரனை நான் ரசித்து வந்திருக்கிறேன்.

முரளி பற்றி ஏராளமான சர்ச்சைகள் வந்திருக்கின்றன, அவற்றில் அநேகமானவை முரளி பற்றிய பொறாமையினால் வந்தவையே, அவற்றில் சிலவும் அதன் பற்றிய எனது கருத்துக்களும்

சர்ச்சை 1.
முரளி பங்களாதேஷ், சிம்பாபே போன்ற பலம் குன்றிய அணிகளுடனே அதிகம் விக்கட்டுகள் சரித்திருக்கிறார்.

இலங்கை அதிகம் டெஸ்ட் விளையாடும் அணிகளுடன் தான் அதிகம் விக்கட்டுகள் விக்கட்டுகளை பெறலாம், முரளி பற்றிய பயத்தினாலோ அல்லது இலங்கை பற்றிய பயத்தினாலோ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா இலங்கைக்கு அதிக போட்டிகளை வழங்குவதில்லை. அப்படியிருக்கும் போது அதிகம் விளையாடாத நாடுகளுடன் முரளி எப்படி அதிகம் விக்கட்டுகளை சாய்ப்பார்?

சிம்பாவே, பங்களாதேஷ் அணிகளை போலவே இங்கிலாந்து அணியும் சுழல் பந்து வீச்சாளர்களை சந்திப்பதில் பயப்படும் அணியே. அது முரளி இங்கிலாந்துக்கு எதிராக செய்த சாதனைகளிலிருந்து தெரிந்திருக்கும். அப்படியாயின் ஷேன் வோர்ன் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற விக்கட்டுகள் எல்லாம் சாதாரணமானதா? (வோர்ன் என்னும் அற்புத பந்து வீச்சாளரை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நான் பார்த்து வியந்த பந்துவீச்சாளர்களில் வோர்னும் ஒருவர்).

இன்னொரு முக்கிய விடயம் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் 50 விக்கட்டுகளை பெற்ற ஒரே வீரர் முரளியாகும். இப்படியிருக்கும்  போது முரளியின் சாதனை பங்களாதேஷ், சிம்பாபே அணிகளுக்கு எதிராக மட்டுமே என எப்படி கூறலாம்.

சர்ச்சை 2
முரளி பந்தை எறிகிறார்.

முரளி என்னும் பந்து வீச்சாளரை கண்டு பொறாமைப்பட்ட வெள்ளையர்கள் அவரை கட்டுபடுத்த செய்த சதியே அவரை எறி பந்து வீச்சாளர் கூறியது, முரளியை அவுஸ்திரேலியர்கள் பந்தை எறிபவர் என கூறியது ஒரு திட்டமிட்ட சதியேயாகும். அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளுக்கும் எறிவதாக நோபோல் வழங்கப்பட்டதே அதற்கு சான்றாகும். லெக்ஸ்பின் பந்துகளை எறியவியலாது என்பது கிரிக்கட் பற்றி அறிந்த கற்றுக்குட்டிகளுக்கும் தெரியும். முரளிதரனின் பந்துவீச்சை குறை கூறும் அவசரத்தில் நடுவர் ரோஸ் எமர்சன் அவர் வீசிய லெக்ஸ்பின் பந்துகளையும் எறிவதாக கூறியது நகைப்புக்குறிய விடயமாகும்.

எத்தனையோ பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்து தன்னை நிரூபித்துள்ள முரளியைவிட பிரெட்லீ அதிக கோணத்தில் (Angle) பந்தை வீசுவது  அவுஸ்திரேலிய பரிசோதனை கூடங்களிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை 3
முரளி இலங்கையிலேயே அதிக விக்கட்டுகளை பெற்றிருக்கிறார்.

இலங்கைக்காக விளையாடும் பந்துவீச்சாளர் தான் அதிகம் விளையாடிய இலங்கை மைதானங்களில் விக்கட்டுகளை பெறாமல் சோமாலியாவுக்கு சென்றா விக்கட்டுகளை பெறுவது.

சர்ச்சை 4
முரளி தமிழில் பேசுவது இல்லை, சிங்களம் மட்டுமே பேசுகிறார். அவர் தமிழர்களை மதிப்பதில்லை.

முதலில் விளையாட்டு வீரர்களை வீரர்களாக மாத்திரம் பாருங்கள், இனம், மதம், சாதி கொண்டு பிரிக்காதீர்கள்.

முரளி தமிழில் பேசாமல் தமிழகத்தை சேர்ந்த தனது மனைவிடன் சிங்களத்திலா பேசியிருப்பார், இல்லை மதிமலர் சிங்களம் பயின்ற பின்னரே அவரை திருமணம் செய்தார். யாருடன் எம்மொழியில் தனது கருத்தை தெரிவிக்க முடியுமோ அவருடன் அம்மொழியில் கதைத்தால் போதும். அவரது தாய் வெற்றி வானொலியின் அவதாரத்தில் கூறியது போல் முரளியுடன் தமிழில் கதைத்தால் தமிழில் கதைப்பார், சிங்களத்தில் கதைத்தால் சிங்களத்தில் கதைப்பார், அல்லது தசாவதார இசை வெளியீட்டு விழாவில் ஜாக்கி சானின் முன்னிலையில் கருணாநிதி தமிழில் ஜாக்கியை வாழ்த்தியதை போல பேச வேண்டும் என்கிறீர்களா? 



பி.கு. (அன்று கருணாநிதி பேசிய தமிழ் எங்களுக்கு விளங்க வில்லை, ஆனால் எல்லாம் விளங்கியயது போல் எப்படி ஜாக்கி சான் தலையசைத்து சிரித்தாரோ தெரியவில்லை)

சாதனை வீரர் முரளி - ஒரு படமும் படம் சார்ந்த பதிவும்

ஒரு வேக பந்து வீச்சாளரை போன்ற முக பாவம், கண்களாலே துடுப்பாட்டவீரரை கலவரப்படுத்துவதால்தான் இவரை சிரிக்கும் வில்லன் என்று அழைக்கிறார்களோ?




கிட்டதட்ட 20 வருடமாக விளையாண்டாலும் இன்னமும் சின்ன பிள்ளை போல் துள்ளி குதிக்கும் சிறுவனாய் முர



மாயக்காரன் முரளியின் அப்பீல்



இந்த அடியை யாராலும் கொப்பி பண்ண முடியாது, முரளி துடுப்பெடுத்தாடுவதை பார்க்க என்னை போல் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.



எல்லாரையும் கிளீன் போல்டாக்கிய முரளியை கிளீன் போல்டாக்கிய மதிமலர் 



“வளரும் பயிர் முளையிலே தெரியும்”, சிறந்த பாடசாலை கிரிக்கட் வீரராக பரிசு பெறும் முரளி




இலங்கையில் சீனியர் முதல் ஜுனியர் வரை அனைத்து தரப்பினரையும் நண்பராக கொண்ட முரளி



முரளியின் இறுதி டெஸ்டன்று காலி கோட்டையை அலங்கரிக்கும் முரளியின் பதாகையை காவல் காக்கும் படை வீரர்


தனது பந்தில் தானே பிடியெடுக்கும் முரளி



கிரிக்கட்டில் எதிரணி வீரர்களுடன் நட்பாயிருப்பதில் உலகில் முதலிடம் முரளிக்குத்தான்




எத்தனை எத்தனை சோதனைகள், அத்தனையையும் சாதனைகளாக மாற்றிய முரளி தன்னை எறிபவர் அல்ல என நிரூபிக்கும் போது




முரளியின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் அர்ஜுன முரளிக்காக வாதாடுகிறார்




சாதனை வீரனை சகாக்கள் வரவேற்கிறார்கள்



முரளியின் வாழ்வில் மறக்க முடியாத பொக்சிங் டே டெஸ்ட் போட்டி, பொறாமைக்கார டெரல் ஹெயாரினால் தண்டிக்கப்படும் போது.


உலகின் மிக சிறந்த ஆப்ஸ்பின் பந்து வீச்சாளர் உலகின் மிக சிறந்த லெக்ஸ்பின் பந்து வீச்சாளருடன்



பந்து சிக்சருக்கு போய் விட்டது, துடுப்பெடுத்தாடிய முரளியோ கீழே



90களின் நடுப்பகுதயில் நம்மவர் முரளி


ஓய்வை அறிவிக்கும் கவலையில் முரளி


இனிமேல் இனிய இல்லற வாழ்வுக்கு முதலிடம் கொடுக்கவிருக்கும் முரளி தம்பதியினர் மகிழ்ச்சியாய்

எரிந்து சாம்பலாகினாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிய முரளியின் வாழ்க்கை சிறப்புற வாழ்த்துகிறேன்

Facebook Badge