மலை மகுடம், வெற்றி FMக்கு நன்றி

காலையில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு கொண்டே எனது காலை வேலைகளை செய்யும் நான், மற்றைய நேரங்களில் வானொலி கேட்பது என்பது மிகவும் குறைவு. எனினும் வெற்றி FM இல் அடிக்கடி மலையக்திற்கான நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு விளம்பரபடுத்தியன் காரணமாக கடந்த சனிக்கிழமை மலைமகுடம் நிகழ்ச்சி கேட்டேன். அந்நிகழ்ச்சி சம்பந்மாக எனது கருத்துகளை எழுத முயற்சித்து அதிக ஆணிபிடுங்கல்களுக்கு மத்தியில் இப்போது எழுதுகிறேன்.

மலையக மக்களிற்கான ஒரு சமகால நிகழ்வுகளை வெளிப்படுத்தகூடிய/விமர்சிக்க கூடிய ஒரு நிகழ்ச்சி காலத்தின் கட்டாயமாகவே நான் காணுகிறேன். நாளின் பெரும்பகுதியை உழைப்பிற்காகவே செலவிடும் அம்மக்கள் படும் கஷ்டங்களை கண்கூடாகவே கண்டிருக்கிறேன். எனது அப்பா ஒரு தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தராக கடமை புரிந்ததாலும் மலையகத்திலிருக்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் கடமை புரிந்ததாலும் அம்மக்களின் பல பிரச்சினைகளை நேரடியாகவே கண்டிருக்கிறேன். இம்மக்களின் இப்பிரச்சினைகளை வெளி உலகிற்கு சொல்ல வேண்டிய கடமை எமக்குள்ளது. காரணம் இலங்கையில் ஒரு பக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை போன்றே பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு சமூகமும் இருப்பது பலருக்கு தெரியாததால் ஆகும்.

சம்பளப்பிரச்சினை, கல்விப்பிரச்சினை போன்றவற்றை வெளிக்கொணர்ந்த அந்நிகழ்ச்சியில் அடுத்து வரும் வாரங்களில் முடிந்தால் அப்பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மிக அடித்தட்டு மக்களிடம் பேசி அவர்களது கருத்துகளையும் வெளிப்படுத்துங்கள். மலையகத்தில் குழந்தைகளின் குறை வளர்ச்சிக்கான காரணத்தை அறிய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செய்த ஆய்வினில் பங்கு பற்றியுள்ளேன். எங்களது ஆய்வின் முடிவாக நாம் கண்டறிந்தது குறைவளர்ச்சிக்கான முக்கிய காரணம் பொருளாதாரம் மற்றும் குழந்தைகளுக்கான போசணை பற்றிய போதிய விளக்கமின்மை. 

தோட்ட மருத்துவமனைகளில் தமிழ் தெரியாத Mid-Wife பணிபுரிதல், தமிழ் தெரிந்தாலும் தாய்மார்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்லாமை, மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை தட்டிப்பறித்தல் போன்றவைதான் அதிகமாக குழந்தைகள் குறை வளர்ச்சியடைவதற்கான காரணமாகும். இங்கு நான் குறை வளர்ச்சி என்பது வயதிற்கு தகுந்த எடை மற்றும் உயரம் காணப்படாமை என்பனவாகும். 

மேலும் மலையத்தில் தோட்ட தொழிலாளர் தவிர்ந்த இன்னும் பல இந்திய வம்சாவளி தமிழர்கள் உண்டு. இவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கு வந்து இப்போது இலங்கையில் குடியேறியவர்கள். 

கல்வி பற்றி மலைமகுடத்தில் கூறிய சில விடயங்களை பார்க்கும் போது எனது பாடசாலை காலம் நினைவுக்கு வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பௌதீக, பொருளாதார காரணிகளை கொண்டு குறைந்த புள்ளிகளை பெற்றால் பல்கலைகழகம் என்னும் நிலை காணப்படுகிறது. இது சரியா பிழையா என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் இவ்வரபிரசாத்தினால் பயனடைவது தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளா என்பது கேள்விக்குறியே? 

நான் உயர்தரம் கற்கும் காலத்தில் வேறுமாவட்டத்தில் சாதாரண தரம் முழுவதும் படித்து, உயர்தரமும் கொஞ்சகாலம் படித்துவிட்டு எங்களது பாடசாலையில் இணைந்த இரண்டு மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவானார்கள், மிகவும் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் எனது பல்கலைகழக தெரிவை இழந்தேன்.  மேலும் 1 புள்ளியினால் பல்கலைகழக தெரிவை இழந்த மாணவனையும் அறிவேன். இப்போதும் இதே பிரச்சினை காணப்படுகிறதா என தெரியவில்லை. 

இந்நிகழ்ச்சியில் முடிந்தளவு இவ்வாறான மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்யுங்கள், அடிமட்டத்தில் வாழும் மக்களின் குரல்களை உலகிற்கு கொண்டு வாருங்கள். வாய்சொல் வீரர்களை விட அடிபட்ட மக்களின் குரல்களில் உள்ள துக்கம் ஆயிரம் கதை சொல்ல கூடியது. பாடல்களை கேட்கும் பத்தோடு பதினொன்றான நிகழ்ச்சியாக இல்லாமல் இலங்கை பொருளாதாரத்தின் அச்சாணியான இம்மக்கள், தங்கள் பொருளாதார பிரச்சினைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி மாற பிரார்த்திக்கிறேன்.

எனக்கு பிடித்து 80களின் பாடல்கள் (இளையராஜா ஸ்பெஷல்)

இன்று இளையராஜா ஸ்பெஷல் விடியல் கேட்ட பின்னர் எனக்கு பிடித்த சில இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களை இணையத்தில் தேடி ரசித்தேன். அப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
1. இளையநிலா பொழிகிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில், பாடும் நிலா S.P.B. யின் மனதை மயக்கும் இனிய குரலில் அமைந்துள்ள இப்பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை பற்றிய ஞானம் இல்லாத சிறிய வயதில் (இப்ப மட்டும் இருக்கா என்ன?) இப்பாடலை ரசித்திருக்கிறேன். கிட்டாரை ரசிப்பவர்கள் இப்பாடலை தவறவிட மாட்டார்கள். மனதில் ஏதாவது கவலைகள் இருக்கும் பட்சத்தில் இப்பாடலை கேட்டு கேட்டு என்னை புத்துணர்ச்சியாக்கிக் கொள்வேன்.


2. என் இனிய பொன் நிலாவே
     இதுவும் மனதை மயக்கும் கிட்டார் இசையை கொண்டுள்ள பாடலாகும். கங்கை அமரனின் அற்புத வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைஞானி, பாடலுக்கு தன் வசீகர குரலால் உயிர் கொடுத்திருப்பவர் K.J. ஜேசுதாஸ்.


3.பொன் மாலை பொழுது
கவிப்ரேரசை இசைஞானி தமிழ் திரையிசைக்கு அறிமுகம் செய்து வைத்த பாடல், பாடலுக்கு S.P.B. தன் குரலால் உயிர் கொடுத்திருப்பார்.  வைரமுத்து தன் கவி வரிகளை இசைஞானியின் அற்புத இசையோடு சங்கமிக்க வைத்திருப்பார்.


4. மடை திறந்து தாவும் நதியலைதான்
இந்த பாடல் கொடுக்கும் உற்சாகம் சிறப்பானது, இளையராஜாவின் இசையில் எம்மை உற்சாகபப்படுத்த சிறந்த பாடல். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி மார்க்கண்டேயர் வாலி. பாடியவர் பாடும் நிலா S.P.B. இப்பாடல் சற்று காலத்திற்கு முன்னால் ரீமிக்சாகவும் அடுத்த தலைமுறையினரிடமும் வெளியாகி சக்கை போடு போட்டது.



5. காதலின் தீபம் ஒன்று
S.P.B.யின் குரலில் சூப்பர் ஸ்டாருக்காவே வடிவமைத்த மென்மையான இசையினை வழங்கியிருப்பார் இசைஞானி. வரிகளுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம்.
6. மன்றம் வந்த தென்றலுக்கு
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. மீண்டும் இசைஞானி, பாடும் நிலாவின், கவி மார்க்கண்டேயரின் முக்கூட்டணி எம்மை ஆக்கிரமித்த பாடல்.


7. சங்கீத ஜாதி முல்லை
  கர்நாடக இசையறிவு அற்ற எனக்கே இப்பாடல் பிடிக்குமென்றால், கொஞ்சமாவது இசையை கற்றறிந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு அமுத சுரபியாக இருக்குமென நினைக்கிறேன். மீண்டும் இசைஞானி, வைரமுத்து, S.P.B.  போட்டி போட்டு பங்களித்திருப்பார்கள்.
8. சங்கீதம் கேளு
  இன்றுவரை இப்பாடலுக்கு இசையமைத்தவர் இசைஞானி என்றே எண்ணியிருந்தேன். இன்று கூகுகிலாண்டவரிடம் தேடி பார்த்த போதுதான் இது இசைஞானியின் தமையனாரான கங்கை அமரனின் இசையில் வெளிவந்த பாடல் என அறிந்தேன். எனினும் இப்பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். பாடலை பாடியவர் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்கள்.




9.பனி விழும் மலர் வனம்
இசைஞானி, வைரமுத்து, S.P.B. கூட்டணியின் மற்றுமொரு மகுடம். இரவு வேளைகளில் இப்பாடலை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு பாருங்கள், சொர்க்கம் தெரியும்
10. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி 
நான் சிறுவனாக இருக்கும் போது வெளிவந்த இப்பாடல் இன்றும் எனக்கு பிடித்தமான பாடலாக இருப்பது இசைஞானியின் வெற்றி எனலாம். பாடலுக்கு குரல் கொடுத்தவர் சிறிய வயது பவதாரிணி. பாடல் வரிகள் கவி மார்க்கண்டேயர் வாலி என நினைக்கிறேன்.


பி.கு.- இன்னும் ஏராளமான பாடல்களை எழுதி கொண்டே போகலாம். ஆனாலும் 10 பாடல்களுடன் முடித்து கொள்கிறேன். இளமையெனும் புங்காற்று, நிலாவே வா, இதயம், புன்னகை மன்னன், இதயக்கோவில் என பட பாடல்கள் எழுத நினைத்தேன், நேரப்பற்றாக்குறை காரணமாக எழுதுவில்லை யாராவது விரும்பினால் தொடரலாம்

Facebook Badge